பொங்கல் முடிஞ்சதும்.. சம்பவத்தை ஆரம்பிக்கும் மழை.. தென்தமிழகத்தில் 2 நாட்கள் கொட்ட போகுது மழை!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குளிர் அதிகரித்தே வந்தது. பொங்கல் சமயத்திலும் கூட மழை இல்லை. குளிர் மட்டுமே இருந்தது. இதற்கிடையே பொங்கல் விழா இப்போது முடிந்துள்ள சூழலில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பருவமழை சீசன் முடிந்த உடனே மழை பெரும்பாலும் நின்றுவிட்டது. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மற்றபடி மாநிலத்தில் கடும் குளிரே நிலவி வந்தது.

வானிலை மையம்:
பொங்கல் சமயத்தில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை. இதனால் பொங்கல் அறுவடையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது பொங்கல் முடிந்துள்ள சூழலில், வரும் நாட்களில் மாநிலத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் (ஜனவரி 16, 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இரண்டு நாட்கள் செம மழை இருக்கு:
வரும் ஜனவரி 18ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 19ம் தேதி கூடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்:
ஜனவரி 20ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 21ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஓட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் 17ம் தேதி 19ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications