அடுத்த 2 மணி நேரம்.. தேனி முதல் குமரி வரை 7 மாவட்டங்கள்.. வெளுக்கப்போகும் கனமழை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் தேனி முதல் குமரி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. காலை முதலே விட்டு விட்டு பெய்த வந்த மழை, மதிய நேரங்களில் கனமழையாக கொட்டியது. குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தென்காசியில் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் தேனி முதல் குமரி வரை, நெல்லை, தென்காசி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று தேனி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான மழை அப்டேட்டில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் -மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (02-03-2025) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (03-03-2025) தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 04-03-2025 முதல் 08-03-2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (02-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (03-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications