பொங்கல் நாளில் இந்த 3 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை மையம் அலர்ட்.. சென்னையில் எப்படி?
சென்னை: தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக நாளை பொங்கல் தினத்தன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. நேற்று முன் தினம் நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று சென்னையில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்தது.

தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ”குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்
நாளை செவ்வாய்க்கிழமை பொங்கல் தினத்தன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் புதன்கிழமை, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16-01-2025 மற்றும் 17-01-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-01-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (13-01-2025) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை பொங்கல் தினத்தன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 13-01-2025 ( 16-01-2025 : தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17-01-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 13-01-2025: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14-01-2025 முதல் 17-01-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 13-01-2025 முதல் 17-01-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு:
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஊத்து (திருநெல்வேலி) 5, நாலுமுக்கு (திருநெல்வேலி) 4, காக்காச்சி (திருநெல்வேலி), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 3, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்) தலா 2,
வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர் மேற்கு (சென்னை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மண்டலம் 09 நுங்கம்பாக்கம் (சென்னை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), மண்டலம் 08 அமைந்தக்கரை (சென்னை), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மண்டபம். (ராமநாதபுரம்), நன்னிலம் (திருவாரூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), மண்டலம் 10 வடபழநி (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), காரைக்கால் (காரைக்கால்), மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), பெரம்பூர் (சென்னை). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications