நைட்டு ஃபுல்லா மழை விடாது போலயே.. சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் வெளுக்க போகுது! வானிலை அலர்ட்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழை (Heavy Rain) வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுவையிலும் இன்று நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று பகலில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. நெல்லை பாளையங்கோட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. எனினும் மாலை நேரத்திற்கு பிறகு ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையிலும் இரவு 10 மணியளவில் பரவலாக மழை பெய்தது.

9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
சென்னை எழும்பூர், நுங்கம்பக்கம், கிண்டி, தி நகர், வடபழனி, பூந்தமல்லி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் இரவும் மழை தொடரும் என்ற வகையில் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று (02-09-2025) காலை 05.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரிசா பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் 2 நாட்களுக்கு மழைக்கு சான்ஸ்
செப்டம்பர் 4 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (02-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (03-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
செப்டம்பர் 4 ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications