அதிர போகுது தமிழகம்.. ஒரே நேரத்தில் 2 கீழடுக்கு சுழற்சிகள்! வெடித்து கொட்டும் மழை- வானிலை மையம் பரபர
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குப் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் 14 மாவட்டங்களிலும் நாளை ஆறு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது.

மழை இருக்கு: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிங்கம்புணரி (சிவகங்கை) 90 மிமீ மழை பெய்துள்ளது. உப்பாறு அணை (திருப்பூர்), பேரையூர் (மதுரை), காரையூர் (புதுக்கோட்டை), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 70 மிமீ மழை பெய்து இருக்கிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய தினம் நல்ல மழை பெய்துள்ளது.
வெப்ப நிலையைப் பொறுத்தவரைக் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 36.0° செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 ° செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
வானிலை மையம்: வரும் நாட்களில் என்ன வானிலை நிலவும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தினசரி செய்திக்குறிப்பில், "வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: நாளைய தினம் ஆக. 21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஆக. 22 முதல் 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 20.08.2024 முதல் 24.08.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆக. 21, 22 தேதிகளில் தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் ஆக. 20 முதல் 23 வரை மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்ட்டுள்ளது.











Click it and Unblock the Notifications