சென்னை வேளச்சேரி டூ தாம்பரம் வரை! நடுவே நீலாங்கரையும் சேர்த்து! 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எங்கெங்கு அதிக கனமழை பெய்யும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை, தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.12 ஆம் தேதி சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வருகை, புறப்பாடு உள்ளிட்டவைகள் என 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அது போல் சென்னை- வேளச்சேரி, நீலாங்கரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்.
இதன்காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 13, 16, 17 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,675 டிஎம்சியாக உள்ள நிலையில் தற்போது அதில் 2,903 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 713 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது.
அது போல் பூண்டி ஏரிக்கும் அதிகமாக நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அந்த ஏரியின் மதகுகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதால், கடலூரில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயலால் பெய்த மழையால், சாத்தனூர் அணையிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தென்பெண்ணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து 5 முறை எச்சரிக்கை விடுத்த பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கமளித்தது. இது சட்டசபையில் எதிரொலித்த போதும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications