சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை.. இன்று இரவு எப்படி.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளும் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்த நிலையில், இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

தீபாவளி அன்று சென்னையில் மழை இல்லை. இன்று மாலை வரையும் மழை எங்கும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வரும் நவம்பர் 14ம்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்தது.. இந்நிலையில் இன்று இரவே மழை அதிகமான பகுதிகளில் பெய்ய தொடங்கி உள்ளது.
சென்னையில் தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூரில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது- இதேபோல் பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பகுதிகளிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதேபோல் சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு,, புதுப்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,, நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். இதேபோல் கனமழை காரணமாக கடலூரிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14/11/2023) விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications