‛ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை.. கோவை மாவட்ட வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
கோவை: கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தொடர் மழையின் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதோடு, அவ்வப்போது கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர் பாடந்துரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கோவையை எடுத்து கொண்டால் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. 45 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் என்பது 38.67 அடியாக உள்ளது. இந்நிலையில் தான் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது கோவை மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும் பட்சத்தில் 24 மணிநேரத்தில் அதாவது ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிய வாய்ப்பு இருக்கும். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலும் மழை பாதிப்புகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஆரஞ்சு அலர்ட் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜுலை 18, வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications