அக்னியை கக்கும் வெயில்.. இந்த மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் கூடும்.. அலர்ட் கொடுத்த வானிலை
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதேபோல் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் சுருளக்கோடில் 2 செ.மீ மழை பெய்தது.

மற்றபடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களை விட வெயில் அதிகமாகவே அடித்தது. இதேபோல் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
5 டிகிரி வரை உயரும்: இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று மற்ற மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று முதல் 23 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இயல்பை விட அதிகமாக: 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். நாளை முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2° 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3" 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், வேலூரில் 41.9° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், திருச்சியில் 41.3° செல்சியஸ், சேலம் & திருத்தணியில் 41.2 செல்சியஸ், மதுரையில் (நகரம்) & தர்மபுரியில் 41.0° செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
ஈரப்பதம்: 20.04.2024 முதல் 24.04.2024 : காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: 20.04.2024: கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications