கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கூல் அறிவிப்பு.. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக மார்ச் மாதம் தொடங்கும் வெயில், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே தொடங்கிவிட்டது. தெலங்கானாவில் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டிருப்பதால் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்த அளவில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த சில நாட்களாக கடலோரப் பகுதிகளில் 91- 98 டிகிரி பாரன்ஹீட் வரையும், மலைப்பகுதிகளில் 71-86 டிகிரி பாரன்ஹீட் வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104 டிகிரி வரையும் வெப்பம் பதிவாகியிருந்தது. இது தவிர சேலம். தருமபுரி, திருப்பத்தூர், திருச்சி, மதுரை (விமான நிலையம் & நகரம்) மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102-104 டிகிரி வரையில் பதிவாகியுள்ளது. இதே கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், திருத்தணி மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 100-102 டிகிரி வரை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்த அளவில் மீனம்பாக்கத்தில் 100.7 டிகிரியும் நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இருக்க கூடும் என்றும் எச்சரித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "இன்று தமிழகம், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். நாளையும், நாளை மறுதினமும் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.10 மற்றும் ஏப்.11ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இன்று முதல் ஏப்.11ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 104 - 105 டிகிரி பாரான்ஹீட் வெயில் வரை இருக்கும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 100-104 டிகிரி பாரான்ஹீட் வரையும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 93-98 டிகிரி பாரான்ஹீட் வரை வெயில் இருக்கக்கூடும். நாளை தொடங்கி ஏப்.11 வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° - 3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
ஈரபதத்தை பொறுத்த அளவில், அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
சமீபத்திய நாட்களாக நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி என தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் மழை அடுத்த 6 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தேர்தல் காலகட்டம் என்பதால் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலில் நீர் குறையாமல் இருக்கும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, பழைய சோறுக் கஞ்சி, எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை அருந்தினால் நீர் குறைவுப் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications