பைக்கில் கிளம்பிய கனிமொழி.. பரபரத்த தூத்துக்குடி ஏரல்.. ஏன் என்னாச்சு?
சென்னை: தூத்துக்குடி ஏரல் பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வரும் திமுக எம்பி கனிமொழி பைக்கில் அமர்ந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி எம்பியான கனிமொழி அந்த மாவட்டத்தில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக ஓடி வருகிறார். சாத்தான்குளம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களின் இரவோடு இரவாக சாத்தான்குளம் சென்று அதிமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார்.

அந்த தொகுதி மக்களை பொத்தி பொத்தி பாதுகாத்து அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் அந்த ஊரே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக தூத்துக்குடியில் மிகாமிட்ட கனிமொழி தூக்கமில்லாமல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அது போல் தூத்துக்குடியில் படகில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவது, கடலோர காவல் படையினருடன் ஆலோசனை நடத்தி எங்கு எப்படி எந்த வழியில் போய் மக்களை மீட்கலாம் என்பது முதல் ஒவ்வொரு விஷயமாக கனிமொழி பார்த்து பார்த்து செய்கிறார்.
முட்டி அளவு வெள்ளநீரில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றார். நேற்று ஏரல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து படகில் பயணித்து, மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார். மேலும், வாக்கி டாக்கி மூலம் பிரச்சனையின் தீவிரத்தை அரசு அதிகாரிகளுக்கு உணர்த்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட், குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் சமைக்க தேவைப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கோரினார். அதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் கனிமொழி எம்.பி கோரிய நிவாரண பொருட்களைப் படகில் கொண்டு சேர்த்தனர்.

பின்னர், கனிமொழி மக்கள் கோரிய உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஏரல் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல முயன்ற போது வழியில் பெரிய அளவிலான வழிகாட்டி பலகை ரோட்டில் சாய்ந்துள்ளது. அந்த கேப்பில் டூவீலர் மட்டுமே நுழைய முடியும். இதனால் ஏரல் மக்களுக்கு டூவீலரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்டார். சரக்கு வாகனம், படகு, பைக் என கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணித்து நம்மை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார் கனிமொழி. அது போல் தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வெள்ளப் பாதிப்பில் சிக்கிய கர்ப்பிணியை கடந்த 19ஆம் தேதி நேரில் சென்று, வழியில் சென்ற பெரிய வாகனத்தை மறித்து, கர்ப்பிணியை மருத்துவமனையில் கனிமொழி கருணாநிதி சேர்த்தார். அவருக்கு மருத்துவமனையில் இன்று (20/12/2023) இரவு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. தாய், சேய் நலமுடன் உள்ளனர். இந்த செய்தியை கனிமொழி,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.












Click it and Unblock the Notifications