ஆஹா.. சென்னையில் மழை! நிம்மதி பெருமூச்சுவிட்ட மக்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு வெதர் அப்டேட் இதோ
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் மிதமான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பொதுவாக கோடைக்காலம் மார்ச் மாதத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி முடிவதற்குள் முந்திக்கொண்டு வந்துவிட்டது. அப்போது தொடங்கிய வெயில் ஜூன் இறுதி வரை வாட்டி எடுத்தது. பின்னர் ஜூலை மாதம் ஒரு சில நாட்களில் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம்தான் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஜூலை இறுதியிலிருந்து மழை பெய்ய தொடங்கிவிடும். ஆனால், இம்முறை ஆகஸ்ட் வந்த பின்னரும் கூட மழை தொடங்கவில்லை.

இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடும் சிக்கலை எதிர்கொண்டனர். இப்படி இருக்கும்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே லேசான மழை எட்டி பார்த்தது. தற்போது சென்னையிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னையில், அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி, கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.
அதேபோல அடுத்த மூன்று மணி நேரத்தில் கும்மிடிப்பூண்டி,பொன்னேரி,ஊத்துக்கோட்டை, ஆற்காடு, அயனாவரம், செய்யூர், பெரம்பூர், திருவள்ளூர், வாலாஜாபேட்டை, மாதவரம் இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
இன்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications