அய்யா ஜாலி தான்.. 'இந்த’ ஊர்க்காரங்க கொடுத்து வச்சவங்க.. கோடையை கூல் ஆக்கப் போகும் மழை! மெட் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை கை கொடுத்த நிலையில், அதற்கு பிறகு மழை வெகுவாக குறைந்தது. தொடர்ந்து ஜனவரி இறுதிப் பகுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தொடர்ந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மூன்று மாதங்கள் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இடையில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல காரணமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று காலை 10 மணி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
தமிழக மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்க கூடும். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று ஐந்து இடங்களில் வெயில் சதம் அடித்திருக்கிறது.
கரூர் வேலூர் சேலம் ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி இருக்கிறது. கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், வேலூரில் 02.02 டிகிரி வெப்பநிலையும் ஈரோட்டில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், சேலம் மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications