திக்குமுக்காட வைத்த பெரு மழை.. இன்று எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! லிஸ்ட் இதோ
சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என்ற விபரத்தை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.

நேற்று அம்பத்தூர், கொளத்தூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம், செங்குன்றம், பூந்தமல்லி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது.
தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு உள்ளார். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து இருக்கிறார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ள எச்சரிக்கையில், "வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்பொழுது இடி மின்னலுடன் கூடிய மிதமான - கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 24 - 26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications