கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி இருக்குமாம்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நேற்று மட்டும் சுமார் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை கடந்திருக்கிறது. அதாவது, ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தியில் 105, சேலம், வேலூர், தருமபுரியில் 104, திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 -106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் ஓரளவு லேசான மழையும் பெய்திருக்கிறது. இது தவிர மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications