மழைநீரில் கச்சா எண்ணெய்.. தீப்பெட்டி எடுக்கவே அஞ்சும் மக்கள்.. ஆக்ஷன் என்ன? அமைச்சர் விளக்கம்!
சென்னை: திருவொற்றியூர் பகுதியில் மழைநீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பரிசோதனைக்குப் பின் எந்த ஆலையின் கழிவு என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டியெடுத்த மிக்ஜாம் புயலால் புழல் ஏரி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏரி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறக்கப்பட்டு கொசஸ்தலை ஆறு வழியாக திறந்து விடப்பட்ட நிலையில் எண்ணூர் முகத்துவாரம் வழியாக தண்ணீர் கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரத்தில் தண்ணீரானது கடல் உள்வாங்காத காரணத்தால் கொசஸ்தல ஆற்றில் நிரம்பி, திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளில் புகுந்தது.

திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால் ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த எண்ணெயானது திடீரென தீப்பற்றிக் கொள்ளக்கூடும் என்பதால் சமையலுக்கு கூட நெருப்பை பற்றவைக்க முடியாமல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரில் தேங்கிய மழைநீருடன் கச்சா எண்ணெய் கலந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், வீடுகளில் எண்ணெய் பிசுக்குகள் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தண்ணீரில் கலந்த கச்சா என்னை கழிவுகள் காரணமாக அப்பகுதி முழுவதும் எரிபொருள் வாசனை வருவதால் சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை நின்று 2 நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் முறையாக அகற்றவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க வந்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம், அப்பகுதி மக்கள், மழைநீர் வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்திருப்பது பற்றி புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், கச்சா எண்ணெய் கலந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தண்ணீரில் கலந்து வந்த கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின் எந்த ஆலையின் கழிவு என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications