"ரெட் அலர்ட்.." மக்கள் வெளியே வர வேண்டாம்.. கொட்டும் அதி தீவிர மழையால் மும்பைவாசிகளுக்கு பரபர அலர்ட்
மும்பை: மகாராஷ்டிராவின் மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கே ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் வரும் நாட்களில் மிகத் தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக அங்கு மக்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மத்திய மகாராஷ்டிராவின் சில பகுதிகள், கொங்கன் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மும்பை மற்றும் புனேவில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை மையம் 'ரெட் அலர்ட்' விடுத்ததால் அங்கே நிலைமை மோசமாக உள்ளது.
ரெட் அலர்ட்: அதேநேரம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போதிலும் அங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் திறந்து இருக்கும் என்றே மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் பெற்றோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த கனமழையால் சாலைகள் முழுக்க மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பல இடங்களில் வெளியே கூட வர முடியாத சூழலே நிலவுகிறது.
ஆலோசனை: மகாராஷ்டிராவில் இடைவிடாமல் மழை கொட்டி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று வியாழக்கிழமை உயர்மட்ட கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உதவி வழங்கவும் மாநிலம் முழுவதும் மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கனமழை கொட்டி வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே: முன்னதாக இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "புனேவில் நிலவும் சூழல் குறித்து ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளிடம் பேசினேன். வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்களை கோரிக்கை விடுத்தேன். பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை ஒருங்கிணைத்துச் செயல்படத் தேவையான உதவிகளை எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பதே எங்களது முக்கிய இலக்கு..
மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மருந்துகள் மற்றும் தண்ணீர் தர ஏற்பாடு செய்துள்ளோம். புனே, மாவல் மற்றும் முல்ஷி அணைப் பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாகவே புனே பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் எந்த பேரிடரையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம். நானே அதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன்.. புனே, ராய்காட், மும்பை கலெக்டர்கள் மற்றும் முனிசிபல் கமிஷனர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications