வங்கக்கடல்+அரபிக்கடல்! ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த மழைக்கு ரெடியா இருங்க!
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்திருக்கும் நிலையில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னை மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இதனால் சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்தனர். சில ரயில்களும், விமானங்களும் கூட மழைக்காக ரத்து செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நாளில், வெளியில் பட்டையை கிளப்பியது. காற்றழுத்த தாழ்வு மண்டலமும் சைலன்டாக சென்னையை கடந்து சென்றது. எனவே மக்கள் நிம்மதி பெமூச்சு விட்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கையில், வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்சீன கடல் பகுதிகளில் இருக்கக்கூடிய வளிமண்டல சுழற்சி மெல்ல வடக்கு அந்தமான் கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும், இப்படி வரும்போது காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், தாழ்வு பகுதியாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்.22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
தற்சமயம் இது வட தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு குறைவு என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல அரபிக்கடலில் விரைவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 -26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications