14ஆம் தேதி உருவாகுது இன்னொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மழை எப்படி? டெல்டா வெதர்மேன் கணிப்பு!
சென்னை: வரும் டிசம்பர் 14 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது என்றும், டிசம்பர் 16 முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 12) இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று முதலே பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த திருவள்ளூர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கரூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், இன்றைய வானிலை நிலவரம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, "வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பதிவாகியுள்ளது. இன்று நாள் முழுதும் பரவலாக விட்டு விட்டு கனமழை எதிர்ப்பார்க்கலாம், ஒருசில இடங்களில் மிககனமழை பதிவாகும்.
வடக்கு உள் மாவட்டங்களான இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம். மேற்கு மாவட்டங்கள்/கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை எதிர்பார்க்கலாம்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் மழை குறையக்கூடும். இன்று வடகடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பகல் நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது கனமழையாக இருக்கக்கூடும்.
இன்று இன்று இரவு உள் மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.
ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் மழைப் பொழிவு குறைந்து காணப்படும். மீண்டும் அடுத்த சுற்று மழைப்பொழிவு டிசம்பர் 16 ஆம் தேதி மாலை முதல் தொடங்கும். ஏனெனில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 14 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாவதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல், புயல் சின்னமாகவே இருந்து வலுவிழக்காமல் மழைப்பொழிவைக் கொடுத்தது. இது அப்படிப்பட்ட தீவிரமான நிகழ்வு அல்ல. எனவே பெருமழையாக இல்லாமல், பரவலான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications