மழை வெளுத்து வாங்கியும் சென்னையில் எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை - மாநகராட்சி அப்டேட்!
சென்னை: சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மாதவரம் அடுத்த வட பெரும்பாக்கம் சாலை, திருவொற்றியூர் ராஜாஜி நகர், வியாசர்பாடி முல்லைநகர், திரு.வி.க.நகர் மண்டலம், காந்திநகர், தேனாம்பேட்டை மண்டலம், டிரஸ்ட் புரம், அண்ணாநகர் மண்டலம் மில்லர்ஸ் சாலை, சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், அம்பத்தூர் தொழிற்பூங்கா, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
செங்குன்றம் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் வசித்த 30-க்கும் மேற்பட்டோரை ஃபைபர் படகுகள் மூலம் பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். ஓட்டேரி பகுதியில் கனமழையால் வீடு இடிந்ததில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிட்வா புயல் வலுவிழந்த சென்னை கடற்கரை அருகே நிலைகொண்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது மழை பெய்து வந்தது. தற்போது சென்னை, புதுச்சேரி இடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் வழக்கமான போக்குவரத்து நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழை பெய்த போதிலும், சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications