குட்பை சொன்ன வடகிழக்கு பருவமழை.. ஆனாலும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: வரும் 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை மூலம் தான் அதிக மழை கிடைக்கும். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் மழை பெறும். எனினும், தமிழ்நாட்டிற்கு மிக குறைந்த அளவு மழையே கிடைக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கணிசமான மழையை பெறும்.

நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 19 ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவ மழை விலகியது. அதன்பிறகு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டிற்கு 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் மழை வடகிழக்கு பருவமழை மூலம் தான் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இந்த மழையை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என மக்கள் எதிர்பார்த்த நிலையில், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் பெருமழை பெய்து வெள்ளக்காடாக்கியது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மீள்வதற்குள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.
பருவ மழை விலகியது: இதனால், தாமிரபரணி கரையோர ஊர்களில் வெள்ளம் புகுந்து கடும் பாதிப்பை சந்தித்தது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவு பெறும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜனவரியிலும் நீடித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலையில் பனிமூட்டம் அதிகரித்து வறண்ட வானிலையே நிலவியது.
பருவமழை விலகுவதற்கன சூழல் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- 14 ஆம் தெதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 18ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 3 நாட்கள் வரை தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதர பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியது. தமிழகம், புதுவை, காரைக்கால், கடலோர ஆந்திர பகுதிகளில் இருந்தும், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் வடகிழக்கு பருவமழை விடைபெற்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications