வடகிழக்கு பருவமழை வெளுத்துக் கட்டிடுச்சு.. தமிழ்நாட்டில் இயல்பை விட 17% அதிகம்! வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 17% கூடுதலாகவும், சென்னையில் 18% கூடுதலாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது, இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், வடகிழக்குப் பருவமழை குறித்து மற்றொரு தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 17% கூடுதலாக பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 17% கூடுதலாகவும், சென்னையில் வடகிழக்குப் பருவமழை 18% கூடுதலாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம், "தென் இந்திய மாநிலங்களில் இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பை விடக் கூடுதலாக மழை பெய்யும். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இயல்பை விட 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications