ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்.. 21 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று அடுத்த 2 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 66% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 201.7 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 335 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1153.5 மி.மீ, கோவையில் 839.4 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 91.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -38 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால் கர்நாடகாவில் பெய்த கனமழை, அதை தொடர்ந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரிக்கு சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications