டேய் போகாதீங்கடா.. மதுரை வெள்ளத்தில் காருடன் மூழ்கிய 2 பேர்! உயிரை பணயம் வைத்து மீட்ட போலீஸ்காரர்
மதுரை: மதுரையில் நேற்று பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கிய காருக்குள் சிக்கிய 2 பேரை போலீஸ்காரர் தங்கமுத்து 2 இளைஞர்களுடன் சேர்ந்து உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார். இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் 2 பேரையும் பத்திரமாக மீட்ட 3 பேரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்றைய தினம் மதுரையில் கனமழை 3 மணிநேரத்துக்கும் அதிகமாக வெளுத்து வாங்கியது. குறிப்பாக நேற்று இரவு சுமார் 10 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து 45 நிமிடங்கள் விடாமல் கொட்டித் தீர்த்தது. இந்த மழையின் காரணமாக மதுரையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. குறிப்பாக மதுரை ரயில் நிலையம், ஆரப்பாளையம், அண்ணா நகர், சிம்மக்கல், மாட்டுத்தவாணி, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், வில்லாபுரம், திருநகர், அவனியாபுரம் உள்பட பல இடங்களில் மழை நீர் தெருக்களில் தேங்கியது.
மொத்தமாக பார்த்தால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை ஏடபிள்யூஎஸ்ஸில் அதிகபட்சமாக 160 மிமீ மழையும், மதுரை தல்லாகுளத்தில் 120 மிமீட்டரம் மழையும் பதிவாகி இருந்தது. முன்னதாக இந்த மழையின் காரணமாக மதுரை மணிநகர் ஓர்க் ஷாப் ரோடு சாலையில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் 10 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. இரவு நேரம் என்பதால் அந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்களை செல்ல விடாமல் தடுப்பதற்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். போலீஸ்காரர் தங்கமுத்து போலீஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது இரவு சுமார் 11 மணியளவில் திடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு கார் சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. குறைந்த அளவு தண்ணீர் தான் இருக்கிறது என்று நினைத்து அதன் டிரைவர் கோபி வேகமாக சுரங்கப்பாதைக்குள் காரை விட்டார். கோபியுடன் காரில் இன்னொருவரும் இருந்தார். சுரங்கப்பாதைக்குள் நுழைந்த பிறகு தான் அங்கு அதிகளவில் தண்ணீர் தேங்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இதனால் அவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அதோடு காரின் கதவை திறந்து கொண்டு அவர்களால் வெளியே வர முடியவில்லை. அதுமட்டுமின்றி தேங்கிய மழைநீரில் கார் மெல்ல மெல்ல மூழ்க தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் தங்கமுத்து மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 26) மற்றும் கார்த்திகேயன் (26) ஆகியோர் உடனடியாக மழைநீரில் குதித்தனர்.
கார் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய நிலையில் அவர்கள் 3 பேரும் அந்த கார் அருகே சென்று கதவை திறந்து 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரையும் கயிறு போட்டு மாநாகராட்சி ஊழியர்கள் மீட்டனர். அடுத்த சில நிமிடங்கள் கார் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோல் சுரங்கப்பாதை அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரும் ஹேண்ட் ப்ரேக் போடாததால் மெதுவாக நகர்ந்து தண்ணீரில் பாதியளவுக்கு மூழ்கியது.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சுரங்கப்பாதையில் கார் மூழ்கியபோது அதனை அங்கிருந்தவர்கள் டேய் போகாதீங்கடா என கத்துவதும், அவர்களை திட்டுவதும் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே தன் உயிரை பணயம் வைத்து 2 பேரை காப்பாற்றிய போலீஸ்காரர் தங்கமுத்து மற்றும் அவருக்கு உதவிய சந்திரசேகர், கார்த்திகேயன் ஆகிய 3 பேரையும் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.












Click it and Unblock the Notifications