புயலே வந்தாலும்.. தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் 2023ல் மழை பற்றாக்குறை மிக மோசம்! இனிதான் கஷ்டம்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மிகக் கடுமையான மழை பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் ராஜா தெரிவித்து உள்ளார்.
2023 ஆம் ஆண்டு நாளையுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் பெய்யும் வெப்ப சலன மழை, அதை தொடர்ந்து வரும் தென் மேற்கு பருவமழை போன்றவை இந்த ஆண்டு தமிழ்நாட்டில் போதிய மழைப் பொழிவை தரவில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் வழக்கமான மழைப் பொழிவை தரும் வட கிழக்கு பருவமழையும் தொடக்கத்தில் போதிய பலனை தரவில்லை.

அதே நேரம் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டை புயல், பெருமழை வெள்ளம் என வானிலை புரட்டிப் போட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வெள்ளம் சூழ்ந்தது. அந்த துயரம் குறைவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பெரு மழை கொட்டித்தீர்த்து வெள்ளக் காடானது.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் கடுமையான மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என கூறி இருக்கிறார் தனியார் வானிலை ஆர்வலர் ராஜா. தென் மாவட்டங்களில் பொழியப்போகும் பெரு மழையை மிக துல்லியமாக கணித்ததற்கு பாராட்டுக்களை பெற்றவர் இவர். பேஸ்புக்கில் இவர் வெளியிட்டு உள்ள பதிவில், "தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட 21 மாவட்டங்களில் கடுமையான மழை பற்றாக்குறை உள்ளது.
தென் மேற்கு பருவமழை காலங்களில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையான மழை பற்றாக்குறையாக இருந்தது தற்போது பெருமழை. தென் மேற்கு பருவமழை காலத்தில் அதிகமழை பெய்த மாவட்டங்களில் தற்போது கடுமையான மழை பற்றாக்குறை. தென் மாவட்டங்களில் எதோ அதிக வறட்சி தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் என்றாலே வறட்சி மாவட்டங்கள்தான் என்றெல்லாம் பதிவிடுவது தவறு என்பதை இயற்கை உணர்த்தியுள்ளது.
எப்போதுமே புரிந்து கொள்ளுங்கள் இயற்கையை பொறுத்தவரை எந்த ஒரு பகுதியும் நிரந்தர மழை பகுதியும் கிடையாது. நிரந்தர வறட்சி பகுதியும் கிடையாது. எல்லா பகுதிகளும் ஏதோ ஒரு காலகட்டத்தில் மழை பெறும். ஏனெனில் அதிகமழை பெறும் சிரபுஞ்சிக்கே வறட்சி ஏற்பட்டுள்ளது. அமேசான் நதியும் வறண்டுள்ளது. ஒரு பக்கம் அதிக மழை ஒரு பக்கம் வறட்சி இயற்கை எதையோ நமக்கு கற்பிக்க முயற்சி செய்கிறது ஏற்று கொள்வோம்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications