தமிழகத்தை குளிர்விக்கப்போகும் மழை.. ஜூன் 29 வரை சில்லென்று மாறும் வானிலை.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த வாரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் போல வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. தற்போது வானிலை முற்றிலுமாக மாறி மழை பெய்த பகுதிகளில் எல்லாம் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.

மே மாதத்தில் மழை பெய்த நிலையில், ஜூன் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், வரும் வாரத்தில் தமிழகத்தில் ஜூன் 9 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல, தேனி, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் கூறியது போலவே நேற்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) முதல் ஜூன் 29 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 110 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சோலையாறு (கோவை) 100 மி.மீ., சின்கோனா (கேவை) - 90 மி.மீ., வால்பாறை (கோவை) - 80 மி.மீ. மழை பதிவானது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை சென்ட்ரலில் 50 மி.மீ.யும், சோழிங்கநல்லூா், காசிமேடு, எண்ணூா், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ.யும், கத்திவாக்கம், ஐஸ் ஹவுஸ், தண்டையாா்பேட்டை, மணலி, ஈஞ்சம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 20 மி.மீ.யும் மழை பதிவானது.
மேலும், சென்னை மற்றும் புறகா் பகுதிகளில் ஜூன் 24 இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications