வெயில் அடிக்குன்னு நினைக்காதீங்க.. அடுத்த 3 மணி நேரத்துக்கு கொட்டப்போகுது மழை.. 6 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடங்கும்போதே கனமழையுடன் தொடங்கியது. அந்த மாதம் முழுக்க மழை விட்டு விளாசியது. இதனால் இயல்பைவிட மழை அதிகமாகவே இருந்தது.

அதன்பிறகு நவம்பர் மாதத் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை இல்லை. இருந்த போதிலும் மாத கடைசி 10 நாட்களில் கொட்டிய கனமழையால் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்தது. டிசம்பர் மாதம் தொடங்கியதும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டியது. தற்போது கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து வருகிறது.
ஒரு புறம் வெயில் அடித்தாலும் பனியும் அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் காலை நேரங்களில் வழக்கத்திற்கு அதிகமாக குளிரான சூழல் நிலவி வருகிறது. நெல்லை, தென்காசியில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலே அடித்து வருகிறது. இந்த நிலையில் தான் மதியம் 1 மணி வரைக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ”தமிழகத்தில் இன்று மதியம் ஒரு மணி வரை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications