அடுத்த 1 மணி நேரத்தில்.. தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல் இன்று சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பகல் நேரங்கள் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் மாலையில் திடீரென கிளைமேட் அப்படியே தலைகீழாக மாறியது. திடீரென மேகமூட்டங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. கோடைக்காலத்தில் திடீரென கொட்டிய மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அடுத்த 1 மணி நேரத்தில்
இன்று தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான வானிலை அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் குமரி ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால் குறிப்பிட்ட இந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமக இன்று திங்கட்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 ஆம் தேதி வரை
வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரை இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications