ராணிப்பேட்டை ரெயின்.. சென்னையில் பொளக்குது மழை.. மொட்டை மாடிக்குகூட போக கூடாதாம்.. வந்தது அறிவிப்பு
சென்னை: புயல் தொடர்பாக எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கையும் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பு: இந்த அறிவிப்பினை தொடர்ந்து 4 மாவட்டங்களை தவிர, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், புயல் தொடர்பாக எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மைத்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உள்ளதாவது:
பதற்றம்: "மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் நம்பி பின்பற்றலாம். பேட்டரிகளை முறையாக பராமரிப்பது, ரேடியோ. டி.வி.க்களை தொடர்ந்து கவனிப்பது, பதற்றத்தை தவிர்த்து அமைதி காப்பது. சூறைக்காற்றினால் ஜன்னல், கதவுகள் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை மூடி வைக்க வேண்டும்.
சில நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு செல்ல வேண்டும். புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க கூடாது. வானிலை மையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.
மொட்டை மாடி: மொட்டை மாடிகளில் இருந்து வேடிக்கை பார்க்கக் கூடாது. வாகனத்தில் வெளியே பயணிக்க கூடாது. பழுதடைந்த கட்டிடத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகளுக்கு அருகில் நிற்கவோ கூடாது. ஈரமாக இருந்தால் மின்சாதனங்களை உபயோகிக்க கூடாது. பழுதடைந்த கட்டிடங்களுக்கு உள்ளே செல்ல வேண்டாம்.
கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். சுத்தமான உணவை உட்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். மழைக்காலங்களில் அவசியம் இன்றி வெளியில் நடமாடக்கூடாது..
எச்சரிக்கை: அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம். ஈரமாக இருக்கும்போது மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும். புயல் தொடர்பாக எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications