கோவைக்கு ரெட் அலர்ட்: இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை.. கோவை குற்றாலம் அருவி மூடல்
கோவை: நீலகிரி மற்றும் கோவைக்கு அதிகன மழைக்கான எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவையில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்துக்கு கன மழை முதல் அதி கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அந்த அறிவிப்பில், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் கன மழை
நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீரால் சூழ்ந்த எம்ஜிஆர் மார்க்கெட்
இந்நிலையில், கோவையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மார்க்கெட்டில் உள்ள தாழ்வான பகுதியிலிருந்த 35 கடைகளுக்குள் புகுந்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
குற்றாலம் அருவி மூடல்
கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான (ரெட் அலர்ட்) வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று மூடப்பட்டுள்ளது.
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications