தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் கொட்டப் போகுது மழை.. வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குட்நியூஸ்
சென்னை: வட உள்மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை தவிர மற்ற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் வெப்பநிலை வெள்ளிக்கிழமை அதிகரிக்கும் என்று கூறியுள்ள வானிலை மையம் அந்த பகுதிகளுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக சொல்வது என்றால், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய வட உள் மாவட்டங்களுக்கு மேலும் 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 5 டிகிரி பாரன்ஹீட் முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தள்ளது..
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் 'மஞ்சள்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "வெப்ப அலை வீசும்தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மே 3-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
மே 3-ம் தேதி வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.அங்கு சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட், இதர மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 100-104 டிகிரி ஃபாரன்ஹீட், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 97-102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
மழைப்பொழிவு குறைவு: நடப்பு ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களை பொறுத்தவரை, வழக்கமான அளவைவிட 83% குறைவான அளவு மழை பெய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.
கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை பெய்து இருக்கிறது. நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, குமரி மாவட்டம் தக்கலையில் 5 செ.மீ., கோழிப்போர் விளை, சுருளக்கோடு மற்றும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் தலா 3 செ.மீ., இதுதவிர கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, முள்ளங்கினாவிளை, சிற்றாறு, சிவலோகம், திற்பரப்பு, களியல், பெருஞ்சாணி அணை, நெல்லை மாவட்டம் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், மதுரை மாவட்டம் வீரகனூர் அணை பகுதிகளில் தலா 2 மற்றும் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
தென் மாவட்டம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதனிடையே நேற்று மாலை தேனி மாவட்டம் போடி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications