தமிழ்நாடு வெள்ளம்.. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறையே இல்லை.. நிர்மலா சீதாராமன் பேட்டி
டெல்லி: தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மாநிலங்களின் வெள்ள பாதிப்பை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை கிடையாது என கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மிக்ஜாம் புயல் வட தமிழ்நாட்டு மாவட்டங்களை மிக கடுமையாக பாதித்தது. இதனைத் தொடர்ந்து குமரிக் கடலில் மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெருமழை கொட்டியது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்குப் பின் பெருமழை கொட்டியது. காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 95 செமீ அளவுக்கு கொட்டியது. இதனால் தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள் மிக மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. இன்னமும் தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீளவில்லை.

இதனிடையே தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பு விவரங்களை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து விவரித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து நேற்று வெள்ள பாதிப்பு பகுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
இந்த நிலையில் டெல்லியில் தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மழை வெள்ளம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை விடுத்து வந்தது. இத்தனை செமீ மழைதான் பெய்யும் என துல்லியமாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க முடியாது.

தென் தமிழ்நாடு வெள்ள பாதிப்பில் மொத்தம் 31 பேர் பலியாகி உள்ளனர். தென் தமிழ்நாடு வெள்ள பாதிப்பில் சிக்கிய 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஶ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படையின் 9 ஹெலிகாப்டர்கள் 70 முறை மீட்பு பணியில் ஈடுபட்டன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணிநேரமும் தமிழ்நாடு வெள்ள பாதிப்பை கண்காணித்து வந்தது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ளம் என தனியாக நிதி கொடுக்கவில்லை. வழக்கமான பேரிடர் நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. நாட்டின் பல மாநிலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை எந்த மாநில வெள்ள பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என பிரகடனப்படுத்த முடியாது. மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கும் வழக்கமும் மத்திய அரசிடம் இல்லை. உத்தராகண்ட்டுக்கும் செய்யவில்லை வேறு எந்த மாநிலத்திற்கும் அவ்வாறு அறிவிப்பு வெளியிடவில்லை. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனிடையே பல வருடங்கள் முன்பாக அதாவது 1999ம் ஆண்டு ஒடிசா புயல் சம்பவத்தை தேசிய பேரிடர் என்று அறிவித்தார்களே என்று திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications