மிரட்டும் மிக்ஜாம் புயல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தியை களமிறக்கிய முதல்வர்!
சென்னை: மிக் ஜாம் புயலால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், அமைச்சர் மூர்த்தியை அந்த மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக களமிறக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை அதிகாரிகளை சற்று விரட்டி வேகமாக வேலை வாங்கக் கூடியவர் என்பதோடு இடுப்பளவு தண்ணீர் வந்தாலும் அசராமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமாடக் கூடியவர்.

அதே போல் சென்னைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சுப்ரமணியன் ஆகிய இருவரையும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக களமிறக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தாமோ அன்பரசனை ஸ்பாட்டில் இறக்கிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதேபோல் மிக் ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் சென்னையில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை களமிறக்கியுள்ளார். அதுமட்டுமல்ல இவர்கள் அனைவரோடு தொடர்ந்து அலைபேசி மூலம் பேசி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், மீட்பு பணிகளுக்கான தயார் நிலை குறித்தும் ஆலோசித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் 12 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் முதல் வருவாய் துறை அலுவலர்கள் வரை புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிக் ஜாம் புயலை பொறுத்தவரை சென்னையிலிருந்து தென் கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக கடலோர பகுதிகளை அடைந்து நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டிணத்திற்கு இடையே 5ஆம் தேதி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திருவள்ளூர் மற்றும் சென்னை மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால் நேற்று முதலே அரசு இயந்திரம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications