சென்னையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. பலத்த காற்றுடன் கொட்டும் மழை.! 4 மாவட்டங்களில் இப்படிதான்!
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த மாதம் இரண்டாவது வாரம் மழை கொட்டி தீர்த்தது.. அப்போது சென்னை முழுக்க 2, 3 நாட்கள் நல்ல கனமழை கொட்டி தீர்த்தது.

வெப்பம் அதிகரிப்பு: அதன் பிறகு அதே அளவுக்கு மழை பெய்யவில்லை என்ற போதிலும், அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் சற்று அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே தலைநகர் சென்னையில் இப்போது பரவலாகப் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வலிமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நல்ல மழை: அதேபோல அரும்பாக்கம், அண்ணா நகர், ஈக்காட்டுதாங்கல், தியாகராய நகர், புரசைவாக்கம், அசோக் நகர், போரூர், கிண்டி பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, புழல் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும், ஆபீஸ் முடித்துவிட்டு வீடு திரும்புவோர் திடீர் மழையால் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.
இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வானிலை மையம்: முன்னதாக வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தது. அதில், "இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.07.2023 மற்றும் 25.07.2023: வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.07.2023 முதல் 28.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications