'சூப்பர் மேக வெடிப்பு'.. அதிர்ந்த ராமேஸ்வரம்- 10 மணி நேரத்தில் 41 செ.மீ மழை-கோவில்களில் வெள்ளம்!
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் அதீதமான மேக வெடிப்பு (Super Cloud Burst) காரணமாக நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணிநேரத்தில் மட்டும் 41 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பாம்பனில் 3 மணி நேரத்திலேயே 19 செ.மீ மழை வெளுத்தெடுத்தது. ராமேஸ்வரம், பாம்பனில் கொட்டிய அதீத மழையால் கோவில்களில் வெள்ளம் புகுந்தது. கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்துக் கொண்டே இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினமே மழை கொட்டத் தொடங்கியது. அவ்வப்போது சாரல் மழை, திடீரென கனமழை என ராமநாதபுரம் மாவட்டத்தை பாடாய்படுத்தியது பெருமழை.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், தாழ்வான இடங்கள் பெரும் வெள்ளக்காடாகின. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள்ளும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாம்பனிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியதால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தங்கச்சிமடத்திலும் பேய்மழை கொட்டியது. ராமேஸ்வரத்தை இணைக்கக் கூடிய கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் மேம்பாலம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையே தெரியவில்லை. இதனையடுத்து பாம்பன் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 10 மணிநேரத்தில் மட்டும் 41.1 செ.மீ மழை பதிவாகி இருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் 44 செமீ மழை பதிவாகி இருக்கிறது. இதுவரை இப்படியான ஒரு மழையை ராமேஸ்வரம் எதிர்கொண்டது இல்லை. 3 மணிநேரத்தில் 19 செமீ மழையை சந்தித்த பாம்பனில் மொத்தம் 28 செமீ மழை பதிவானது. தங்கச்சி மடத்தில் 34 செமீ மழை பதிவாகி இருக்கிறது. ராமநாதபுரத்தில் 13 செமீ, கடலாடியில் 7 செமீ மழை பதிவானது.
இந்த கனமழை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஜான் பிரதீப் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகையில், இதனை மேக வெடிப்பு என சொல்லவும் முடியாது. அதையும் தாண்டி சூப்பர் மேக வெடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் ராமேஸ்வரத்தில் 10 மணிநேரத்தில் 41 செமீ மழை கொட்டித் தீர்த்தது என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications