‛‛இன்று ஆரஞ்சு அலர்ட்’’.. தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மிக கனமழை! லிஸ்ட் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் 5ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் கோடை மழையால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.
தென்மேற்கு பருவமழை: அதுமட்டுமின்றி கேரளாவில் முன்கூட்டியே ஜூன் 1ல் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஜுன் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆரஞ்சு அலர்ட்: தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்டை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 6 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கோவை- நீலகிரி: இதுதவிர தமிழகத்தில் இன்று திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது எனவும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: மேலும் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும். பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25ம் தேதி மாலை நிலவும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதனால் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வருகிற மே 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications