சென்னை மழை பாதிப்பு எதிரொலி! ஃபார்முலா கார் பந்தையம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!
சென்னை: டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வை மழை பாதிப்பு காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்துள்ளது தமிழக அரசு.
இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைநகரான சென்னையில் "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் (F4) நடத்த வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவு போட்டியாக (Street Circuit) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்தியா மற்றும் தெற்காசியப் பகுதிகளில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் என்ற பெருமையை சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பெற இருந்தது. ஆனால் அதற்குள் மிக் ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் பந்தயமே ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் வந்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; ''மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ''
"சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் (F4) போட்டியினை தமிழ்நாட்டில் நடத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 40.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications