வடகிழக்கு பருவமழை.. எப்படி இருக்கும் இந்த சீசன்.. சமாளிக்க தயாராகும் தமிழக அரசு
சென்னை: கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை விலகிவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. . தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, பதிவான மழையின் அளவு 354 மி.மீட்டர். இயல்பு அளவு 328 மி.மீ. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகம்.

சென்னையைப் பொறுத்தவரை, பதிவான மழையின் அளவு 779 மி.மீ. இக்காலக்கட்டத்தின் அளவு 448 மி.மீ. இது 74 சதவீதம் இயல்பை விட அதிகம் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பான அளவே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலைத்திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பருவமழை தொடங்கும் முன் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு விடுமா? என்று சென்னைவாசிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications