சென்னை + 3 மாவட்டங்களுக்கு மட்டும் கருணை.. இன்னைக்கு மிதமான மழை இருக்கு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இப்படி இருக்கையில், சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 71% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 195.7 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 334.2 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1143.5 மி.மீ, கோவையில் 836.5 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.3 மி.மீ, நாகப்பட்டினத்தில் 91.7 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -36 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரண்டு முறை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் குறைந்திருக்கிறது. எனவே அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஓரளவு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ததாலும், மற்ற மாவட்டங்களில் வறட்சியான வானிலை நிலவுகிறது. குறிப்பாக சென்னையில் வெயில் பொளந்து கட்டி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த இரண்டு வாரமாக வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, 37 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவை பெற்றிருக்கிறது. இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் வறட்சியான வானிலை நிலவும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மழை பெய்யும். அடுத்தடுத்த நாட்களில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications