கொங்கு + தென் தமிழகத்திற்கு இன்று பெரிய நாள்.. பெங்களூரில் சம்பவம் தொடரும்! வெதர்மேன் தந்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே உள் மாவட்டங்கள், கொங்கு பகுதிகள் மற்றும் தென் தமிழகத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாகக் கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் கணிசமாக மழை பெய்துள்ளது.

இதற்கிடையே இன்றைய தினம் தமிழகத்தில் உள், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உள் மாவட்டங்கள், மேற்கு தமிழகம் (கொங்கு பகுதிகள்) மற்றும் தென் தமிழகத்திற்கு மற்றொரு பெரிய நாள். பெங்களூரில் இன்றும் சேர்த்து அக்டோபர் 24 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. செங்கோட்டை மற்றும் குற்றாலம் பகுதிகளைச் சுற்றி தெற்கே மிகத் தீவிரமான மழை மேகங்கள் காணப்படுகின்றன.
அண்ணாநகர் - ஸ்ரீபெரும்புதூரில் இன்று மழை பெய்தது போல கேடிசிசி (சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்) பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மழை தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
பெங்களூர் மழை: கர்நாடகாவைப் பொறுத்தவரைக் கடந்த மூன்று நாட்களாகவே அங்கு நல்ல மழை பெய்தது. இந்தச் சூழலில் நேற்று இரவு திடீரென அங்குக் கனமழை கொட்டியது. இதனால் வடக்கு பெங்களூரில் பாதிப்பு மோசமாக இருந்தது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் கூட தண்ணீர் புகுந்தன.
குறிப்பாக சவுடேஸ்வரி, எலகங்கா, வித்யாரண்யபுரா, ஜக்குரு, கொடிகேஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வடக்கு பெங்களூரில் மட்டுமே பாதிப்புகள் அதிகமாக இருந்தது. இந்த திடீர் மழையால் வடக்கு பெங்களூர் பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே பெங்களூருக்கு அடுத்த சில நாட்களும் மழை தொடரும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications