எல்லாருமே டிசம்பரில் தான் எதிர்பார்த்தாங்க.. ஆனால் அக்டோபரிலேயே வேலையை ஆரம்பிச்சிட்டான்: வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஒரு வாரம் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக சென்னையில் வரும் அக்டோபர் 14ம் தேதி கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இது பற்றி மீம்ஸ் வடிவில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், "எல்லாருமே டிசம்பர் மாதம் தான் எதிர்பார்த்தாங்க. ஆனால் யாருக்குமே தெரியல.. அக்டோபர் மாதமே அவன் வேலையை ஆரம்பிச்சிட்டான்", என்ற மீம்ஸை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்குவது தான் வழக்கமான ஒன்று . ஆனால் இந்த முறை முன்னதாவே தொடங்கும் என்று தெரிகிறது. அதை எதிரொலிக்கும் வகையில் தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்தார். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும்வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இருக்கிறது என்றும் கூறிய பாலச்சந்திரன், இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்தார்.
நாளை (சனிக்கிழமை) வங்கக்கடலில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகுவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக கூறிய பாலச்சந்திரன், இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
நாளை (சனிக்கிழமை) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் 14-ந்தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் வரும் 14ம் தேதி கனமழை பெய்ய போவதை தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் உறுதி செய்துள்ளார். சென்னையில் முழுமையாக மழை தொடங்க இன்னும் 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்றும் அதுவரை அவ்வப்போது சிறிய அளவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்னும் நான்கு நாளில் ஆரம்பம் என்ற கேப்சனுடன் மீம்ஸ் வடிவில் வெளியிட்ட இன்னொரு பதிவில், "எல்லாருமே டிசம்பர் மாதம் தான் எதிர்பார்த்தாங்க. ஆனால் யாருக்குமே தெரியலல.. அக்டோபர் மாதமே அவன் வேலையை ஆரம்பிச்சிட்டான்", என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாகவே டிசம்பரில் தான் சென்னை மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படுவது வழக்கம். கடந்தஆண்டு பெய்த மழையை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு வெள்ளக்கடாக மாற்றியது. சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை ஆனது. அதனால் கனமழை என்றாலே சென்னைக்கு எப்போதுமே ஆகாது. சென்னை சிறிய மழைக்கே தாங்காத நிலையில் தான் கடந்த ஆண்டு வரை இருந்தது. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications