போவோமா ஊர்கோலம்.. மாம்பாக்கம் டூ தாம்பரம் ஷிப்ட்டான மேகக் கூட்டங்கள்! அடுத்து என்ன? வெதர்மேன் தகவல்
சென்னை: சிறுச்சேரி- மாம்பாக்கம்- தாம்பரத்தை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்து செல்வதாகவும் அங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்கின்றன. அதாவது சிறுச்சேரி- மாம்பாக்கம்- தாம்பரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மற்றொரு பதிவில் இன்று காலை சென்னையில் பெய்த மழை மிகவும் கனமழையாகும். பூண்டி ஏரியானது நிரம்பிவிட்டது. இதன் உபரி நீரானது கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பூண்டி ஏரியில் நீர் சேமிக்க இடமில்லாமல் நிரம்பி இருந்தது.
சென்னையில் இன்று காலை பெய்த மழை ஏதோ நீர் வீழ்ச்சி போல் இருந்தது. இது விட்டுவிட்டு குறைந்த நேரத்தில் அதிக மழையை கொடுத்தது. மேகக் கூட்டங்கள் எல்லாம் தாம்பரத்தை நோக்கி செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறித்து வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை ஒட்டிய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவியது.
இன்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம், இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரமடையும். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யவும், டிச., 17 வரை மிதமான மழை தொடரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 35 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது போல் சென்னை- வேளச்சேரி, நீலாங்கரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 13, 16, 17 ஆகிய தேதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications