சென்னையிலிருந்து திருப்பத்தூர் வரை! ஒட்டுமொத்த வடதமிழகம் வரை! சும்மா ஊட்டிதான் போங்க! வெதர்மேன்
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்கள் எல்லாம் தூரல் அல்லது மிதமான மழையுடன் சும்மா ஊட்டி போல் ஜில் ஜில் வானிலையில் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் சுருக்கமாக சொல்ல போனால் வடதமிழகத்தின் அனைத்து பகுதிகளில் ஊட்டி போல் குளு குளுவென மழைச் சாரலுடன் மிதமான மழையும் பெய்யும்.

மற்ற பகுதிகளான காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, கேரளா உள்ளிட்ட இடங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அது போல் தமிழகத்தில் நீலகிரியில் உள்ள பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி, கோவையில் உள்ள வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்யும். கன்னியாகுமரி மற்றும் பெரியார்- தேக்கடி பகுதிகளிலும் மாஞ்சோலை பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்
தமிழகத்தில் காற்று வீசும் திசைகளில் டமால் டுமீல் மழைக்கு பிரேக் இருக்கும். காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு கடற்கரை பகுதிகளான மும்பை முதல் கேரளா வரை தீவிர கண்காணிப்பில் இருப்பது அவசியம். அடுத்த ஒரு வாரத்திற்கு அங்கெல்லாம் மிக அதிக மழை பெய்யும்.
அடுத்த 10 நாட்களுக்கு கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும். மேட்டூரில் அதிக நீர் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications