வியர் இஸ் தி மழை பார்ட்டி டுநைட்? நம்ம சென்னையில்தான்! குற்றாலம் போறீங்களா? வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் சில மலை பிரதேசங்களுக்கு போக வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெதர்மேன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று தமிழகம் முழுவதும் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

மதுரை- சிவகங்கை- புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிறைய சிவப்பு தக்காளிகள் உள்ளன. எனவே இங்கு நல்ல கனமழை பெய்து வருகிறது. அது போல் பந்தலூர், தேவாலா, நீலகிரியில் கனமழை வெளுத்தது. வால்பாறையிலும் இதே நிலைதான். சேலம்- நாமக்கல் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
வேலூர்- திருவண்ணாமலை- விழுப்புரம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கன்னயாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை பெய்தது. கேரளாவில் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால் இன்று இரவு மழைக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
அது போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் இன்று இரவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எங்கு பார்த்தாலும் மழை பெய்து வருவதால் மலை பிரதேசங்களான வால்பாறை, வயநாடு, பந்தலூர், குடகு ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். அது போல் வரும் நாட்களில் குற்றால மலையிலும் அதிக நீர் வரத்து காணப்படும் என்பதால் அங்கு செல்வோர் உஷாராக இருத்தல் வேண்டும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அது போல் அவர் இன்னொரு பதிவில் கூறியிருப்பதாவது: இன்று சூரியன் ரொம்ப பிரகாசமாக இருக்கும். அது போல் வானத்தில் மீன் செதில்கள் போல் மேகங்கள் இருக்கும். இப்படி இருந்தால் நான் சொல்லவே தேவையில்லை. உங்களுக்கே தெரியும். இன்று இரவு நல்ல மழை பெய்ய போகிறது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாகத் தமிழகத்தில் இன்று(12.7.2024) முதல் 18 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 15ம் தேதிவரை 55 கி.மீ வரை காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் இன்று முதல் 16ம் தேதி வரை மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கர்நாடக - கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும். இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications