சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை! வெதர்மேன் முக்கிய அப்டேட்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஒன்று அல்லது 2 மணி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கும். இது 4 முதல் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையானது இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொடங்கிவிடும்.

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும். டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, ராமநாதபுரத்தின் ஒரு சில பகுதிகளில், கடலூர், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.
இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது தற்போது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தற்போது மெதுவாக நகர்ந்து வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு, அதாவது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை தொடங்கும். நல்ல மேகக் கூட்டங்கள் அந்த மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யும். நாளை முதல் சென்னையில் மழை வெளுக்கும். டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீடிக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை கடற்கரைக் கீழ் கடந்தாலோ அல்லது வடதமிழக கடற்கரையை கடந்தாலோ சென்னைக்கு நல்ல மழை பெய்யும். எப்படி பார்த்தாலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கும் கனமழை முதல் மிக கனமழை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே இன்று முதல் டிசம்பர் 1 வரை பெய்யும் மழையை ரசியுங்கள்.
கார்களை பாலத்தில் நிறுத்தலாமா, விடுதியில் தங்கிவிடலாமா, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு போய் எல்லா மளிகை பொருட்களையும் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விகளுக்கு நான் எந்த பதிலையும் அளிக்க மாட்டேன். இதுவரை அது போன்ற ஒரு அறிவுரையை நான் எப்போதும் வழங்கியதில்லை.
பூண்டி ஏரியில் 15 சதவீதமும் செம்பரம்பாக்கத்தில் 59 சதவீதமும் செங்குன்றம் ஏரியில் 71 சதவீதமும் மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை தேவைப்படுகிறது.
வரும் 2025 ஆம் ஆண்டு தண்ணீர் பிரச்சினை இருக்குமா என்றால் இதற்கு எனது பதில் இல்லைதான். இந்த 4 அல்லது 5 நாட்கள் மழை பெய்தாலே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறேன். இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இதுதான் மிக பெரிய கடைசி மழையாக அமையும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக குளிர் வாட்டி வருகிறது. ஊட்டி, கொடைக்கானலிலும் உறைபனி நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னையின் குன்றத்தூர், போரூர், மாங்காடு, பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அது போல் சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications