Rain Alert: கடல்போல் சூழ்ந்த வெள்ளம்.. சென்னையில் மூடப்பட்ட மூன்று சுரங்கப் பாதைகள்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் விடிய விடிய பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ள நிலையில் சென்னையில் மூன்று சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கோவை, புதுக்கோட்டை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய இடி மற்றும் மின்னலுடன் கொட்டி தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் அதீத மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மின்னல் காரணமாக இரவு நேரம் பகல்போலக் காட்சியளித்தது. சென்னையில் அதிகாலையில் சற்று மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழை காரணமாக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளிக்கிறது. பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிசிடிவி கேமராக்கள் மூலமாக சுரங்கப் பாதைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. சென்னையில் இரவு முழுவதும் பெய்திருந்த மழை பெய்திருந்த நிலையில் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்காமலேயே இருந்தது.
இதனால், காலையில் சுரங்கப் பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நிலவியது. மாநகரில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், காலை முதலே பெய்து வரும் மழை காரணமாக நீர் தேங்கியதால் சென்னையில் மூன்று சுரங்கப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அந்த வகையில், பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, சுந்தரம் பாயிண்ட் சுரங்கப் பாதை ஆகியவற்றில் மழை காரணமாக நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூட்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications