மழை வெள்ள பாதிப்புக்கு காரணம் அரசுதான்.. முன்னெச்சரிக்கை இல்லை.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
திருநெல்வேலி: அதி கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு இயந்திரம் செயல்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு எடப்பாடி பழனிச்சாமி உதவிகளை வழங்கினார்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று நேரில் பார்வையிட்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றார். பாளையங்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறி வருவதாக தெரிவித்தார். வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தும் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்கூட்டியே உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்க முடியும் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வெள்ள நீரில் பல மக்களின் உடமைகள் வெள்ளத்தோடு அடித்துச்செல்லப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மழை வெள்ளத்திற்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் எடப்படி பழனிச்சாமி.
வெள்ள சேதம் குறித்து கணக்கீடு எடுக்காமலேயே குத்து மதிப்பாக நிவாரண தொகை எப்படி கேட்க முடியும் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி இது விளம்பர அரசாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications