வெளுத்துக் கட்ட காத்திருக்கும் கனமழை.. கலெக்டர்களுக்கு பறந்த முக்கிய கடிதம்.. தலைமைச் செயலர் அதிரடி!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை அக்டோபர் 15 மற்றும் நாளை மறுநாள் 16 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்டங்களில் மழை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications