மீண்டும் கிளம்பிய பூதம்! டிச 31, ஜன 1ல் கொட்டப்போகும் கனமழை.. தூத்துக்குடி கலெக்டர் மேஜர் வார்னிங்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி மக்களுக்கும், அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவில் இயல்பை விட பல மடங்கு அதிகம் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் 2 மாவட்டங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு மக்களை மீட்டனர். அதன்பிறகு வெள்ள நீர் வடிந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ.6 ஆயிரமும், கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1000-ம் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 31ம் தேதி மற்றும் 2024 ஜனவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்ட உள்ளது.
இந்நிலையில் தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி இன்று மாவட்ட மக்கள் மற்றும் அலுவலர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதோடு மாவட்டங்களில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் அலுவலர்கள் வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ள தடுப்புக்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications