தூத்துக்குடி மக்களே..கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்வோருக்கு குடை அவசியம்! பிரதீப் ஜான் அட்வைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்பதால், கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு செல்வோர் குடை எடுத்து செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீர் ஜான் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெரிதும் ஏமாற்றதையே கொடுத்தது. தமிழ்நாட்டில் இயல்பு அளவில் பெய்தாலும், கேரளா, கர்நாடக மாநிலங்களில் போக்கு காட்டியது. கேரளாவில் மழை இல்லாமல் அணைகளில் நீர்வரத்து வேகமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் கேரள மாநிலம் திணறியது.

கர்நாடகாவை பொறுத்த அளவில், அங்கிருந்து திறக்கப்டும் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது. எனவே மேட்டூர் அணைக்கு நீர் கிடைக்கவில்லை. இது டெல்டா மாவட்டங்களில் கடுமையான எதிர்வினையை கிளப்பியது. இந்த போராட்டங்களுக்கு மத்தியில், தென் மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
தொடக்கத்தில் நார்மலாக பெய்து வந்த இந்த மழை, மிக்ஜாம் புயல் காரணமாக வீரியமெடுத்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதற்கு முன்னர் இல்லாத அளவு மழை பதிவானது. பொருள் இழப்பு, உயிரிழப்பு என மக்கள் ஏராளமான நெருக்கடியை சந்தித்தனர். அதேபோல தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் தற்போதுதான் மெல்ல மீண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று, சென்னை டூ தூத்துக்குடி வரை கடலோரப் பகுதிகளில் இன்று 10 - 20 மி.மீ அளவுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் தேவாலயங்களுக்கு செல்பவர்கள் குடை எடுத்து செல்ல வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும், கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், ஆனாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
https://www.facebook.com/tamilnaduweatherman/posts/pfbid02pRqmvAT16aoF25EFLNcFkyeh3VfnZ4ErUY9T6ecfsBd9MXDATncUpC4shh27uXdPl
மேலும், "இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications